ஞாயிறு, 31 ஜூலை, 2011

மீண்டும் குலுங்கியது ஜப்பான் ! பீதியில் மக்கள்

ஜப்பான் நாட்டில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பெரும் பீதியடைந்தனர். ஜப்பானில் கடந்த மார்ச் 11-ந்தேதி பூகம்பமும், சுனாமியும் ஏற்பட்டது. அதில் 20 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

புகுஷிமாவில் உள்ள அணு உலையில் பாதிப்பு ஏற்பட்டு, அதனால் கதிர் வீச்சு வெளியானது. எனவே அங்கு மறு சீரமைப்பு பணிகள் நடை பெற்று வருகிறது.

இந்த நிலையில் ஏற்கனவே, பூகம்பம் ஏற்பட்ட ஹோன்சு கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது. இவாகி என்ற இடத்தில் அதிகாலை 3.54 மணிக்கு இந்த நில நடுக்கம் உண்டானது. இதனால் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கின. எனவே, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

அலறியடித்த படி எழுந்த அவர்கள் குழந்தைகளுடன் வீடுகளை விட்டு வெளியேறி விடிய விடிய வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். இதற்கிடையே, அங்கு 6.4 ரிக்டர் அளவில் நில நடுக்கம் பதிவானதாக ஜப்பான் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இவாகி பகுதியில் பூமிக்கு அடியில் 44 கி.மீட்டர் ஆழத்தில் இது ஏற்பட்டதாகவும் அறிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் இவாகி மற்றும் அதை சுற்றி 100 கி.மீட்டர் பரப்பளவில் உணரப்பட்டது. தலைநகர் டோக்கியோவிலும் கட்டிடங்கள் குலுங்கின.

ஏற்கனவே பாதிப்பு ஏற்பட்ட புகுஷிமா நகரிலும் நில நடுக்கம் கடுமையாக இருந்தது. இதனால், அங்குள்ள அணு உலைக்கு பாதிப்பு எதுவும் ஏற்பட வில்லை. நிலநடுக்கத்தால் அலைகள் அதிக உயரத்துக்கு எழுந்தாலும் சுனாமி எச்சரிக்கை அறிவிக்கப்படவில்லை.

இன்றைய நிலநடுக்கத்தால் காயமடைந்தவர்கள், சேதம் தொடர்பான விபரங்கள் இன்னமும் வெளியாகவில்லை.


கருத்துகள் இல்லை: