நியூசிலாந்து நோக்கி படகில் அடைக்கலம் தேடி சென்ற 87 இலங்கை தமிழர்களையும் இந்தோனேஷியா அரசு பிடித்து வைத்திருக்கும் விவகாரத்தில் மனித நேயத்தோடு தலையிட்டு அவர்களை பொறுப்பேற்று நியூசிலாந்து நாட்டுக்குள் அனுமதிக்கவேண்டுமென கோரி பிரித்தானியா வாழ் தமிழர்கள் நேற்று லண்டனில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த மாதம் 12ம் தேதி ஒரு படகில் 87 இலங்கை தமிழர்கள் அடைக்கலம் தேடி நியூசிலாந்து நாட்டிற்கு சென்றவர்களையே தொடர்ந்தும் இந்தோனேஷியா அரசு பிடித்து கடலிலேயே தடுத்து வைத்திருப்பதோடு, அவர்களை மீண்டும் இலங்கைக்கு திரும்பிச்செல்லுமாறு வலியுறுத்தி வரும் நிலையிலேயே இப் போரட்டம் நடைபெற்றுள்ளது.
நேற்று 10-08-2011 புதன்கிழமை மாலை 2:00 மணி முதல் மாலை 4:30 மணிவரை New Zealand House, 80 Haymarket, London SW1Y 4TQ எனும் இடத்தில் அமைந்துள்ள நியூசிலாந்தின் தூதரகத்திற்கு முன்பாகவே லண்டன் வாழ் புலம்பெயர் தமிழர்கள் இப்போராட்டத்தை நடாத்தியிருந்தனர்.
இப்போராட்டத்தின் போது நியூசிலாந்து நாட்டின் தொலைக்காட்சியின் செய்தியாளர்கள் அப்போராட்டத்தை ஒளிப்பதிவு செய்ததோடு, போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்களிடம் அப்போராட்டம் தொடர்பாக கேட்டு பதிவுசெய்ததை அவதானிக்க முடிந்தது. போராட்டத்தின் இறுதியில் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது.
இதேபோன்று ஏனைய நாடுகளிலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் அங்குள்ள நியூசிலாந்து நாட்டின் தூதராலயங்களூடாகவும், தொடர்ச்சியான அழுத்தங்களை கொடுத்து கடலிலே தத்தளிக்கும் எம் உறவுகளின் எதிர்கால வாழ்விற்காய் உதவ வேண்டுமெனவும் இப்போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த லண்டன் வாழ் தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நியூசிலாந்து நாட்டின் உயர் ஸ்தானிகராலயத்திற்கு மின்னஞ்சலூடாகவும், தொலைபேசியூடாகவும் தொடர் அழுத்தங்களை வழங்குவதும் உயிர்த் தஞ்சம் கோரி காத்திருக்கும் எம் உறவுகளை நியூசிலாந்து அரசு பொறுப்பேற்க உந்துதலாக அமையுமெனவும் கூறினர்.
பிரித்தானியாவில் கடந்த சில நாட்களாக நடைபெற்றுவரும் வன்முறை கலந்த கலவரங்களால் ஏற்பட்டுள்ள பதற்றத்தின் காரணமாக குறைந்தளவு மக்களே இப்போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக