வியாழன், 13 பிப்ரவரி, 2014

ஆலயங்கள் நமது வரலாற்றை பேணும் பொக்கிஷங்கள்: சிறீதரன் எம்.பி











ஆழிப் பெருங்கடலோரம் வெற்றிலைக்கேணி எனும் தமிழர் வாழ்வியலில் மறக்க முடியாத நாமம் கொண்ட அழகிய கடலூரில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வவிநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற கும்பாபிசேக நிகழ்வின் அடையாளமாக, செல்வவிநாயகர் அருளமுதம் மலர்வெளியீட்டு விழா இடம்பெற்றுள்ளது.
இதில் அருளாசி உரைகளை நல்லை ஆதீனமுதல்வர் சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய ஸ்வாமிகள், பிரதிஸ்டா பிரதமகுரு சிவஸ்ரீ கனகசிவ குமாரக்குருக்கள் சர்வ போதகாசிரியர் இரத்தின பாலகிருஸ்ண குருக்கள் ஆகியோர் வழங்கினர்.
மலரின் வெளியீட்டு உரையை யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரி உபபீடாதிபதி கலாநிதி.செல்வி.நி.நல்லையா நிகழ்த்தினார். மலரின் முதற்பிரதியை யாழ்.மாவட்ட பா.உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பெற்றுக் கொண்டார்.
நயப்புரையை யாழ். நெல்லியடி மெதடிஸ்த மிஸன் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் நடராஜா தேவராஜா வழங்கினார். சிறப்புரையை வடமராட்சி வலய கல்விப் பணிப்பாளர் சிவபாதம் நந்தகுமார் ஆற்றினார்.
மலர் வெளியீட்டு நிகழ்வின் பின்னர் சிறீதனர் எம்.பி கருத்துரை வழங்கும்போது,
புகழ்பூத்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றிலைக்கேணி எனும் நெய்தல் நிலத்தில் இந்த மக்களின் நம்பிக்கையின் வடிவமாகி பல்வேறு இயற்கை மற்றும் மிக மோசமான போர் இடர்கள் எதிர்வந்த போதும் நம்பிக்கையின் பால் இங்கு இந்த ஆலயத்தை சுற்றி எழுப்பப்பட்ட வாழ்வு இன்று தொடர்கின்றது.
இடர்கள் வரும்போது மனிதர்கள் தங்களை மீறிய எல்லையற்ற சக்திவடிவமாக இருக்கும் ஆண்டவனை நோக்கி ஓடுவது இயல்பானது.
மனிதர்கள் மட்டுமல்ல அவர்தம் வரலாறுகளும் கலை பண்பாடுகளும் கோயில்களை காப்பரணாக கொண்டு நிலைத்துள்ளன என்பது வரலாறு கூறும் உண்மை.
இந்த பாரம்பரியத்தில்தான் இந்த பிரசித்திமிகு விநாயகர் ஆலயமும் இந்த மக்களின்  வாழ்வின் தாங்குமடியாக திகழ்வதை இந்த கும்பாபிசேக விழாவும் அதைச் சிறப்பிக்கும் வகையில் வெளிவந்துள்ள மலரும்.
நான் இந்தியா சென்றிருக்கிறேன். அங்கு பல ஆலயங்களையும் நூலகங்களையும் பார்த்திருக்கின்றேன்.அவை வெறும் ஆலயங்களாகவோ அல்லது வெறும் வாசிப்புக்கே ஆன நூலகங்களாகவோ இருக்கவில்லை. அவை ஒரு சமூககடமையை செய்கின்றன.
வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு காவிச்செல்லும் கடமையை செய்கின்றன. ஏன் அங்கே எம்மிடம் இல்லாத எம்மைப் பற்றிய வியக்கத்தகு ஆவணங்களும் பேணப்படுகின்றன.
அந்த வகையில்தான் ஆலயங்களிலோ அல்லது பள்ளிகளிலோ அறநெறி ஸ்தாபனங்களிலோ வெளியிடப்படும் மலர்கள் அந்த மக்களின் காலத்தை வரலாற்றை பிரதிபலிக்கும் ஆவணமாக மாறவேண்டும் இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.
இந்த ஆலயத்தில் வெளிவந்துள்ள இந்த இந்த நெய்தல் நிலத்தின் பக்தி இலக்கியத்தின் ஒரு வடிவமாக காலத்தில் வரலாற்றை தேடுகின்றவர்களுக்கு நிச்சயம் உதவும் என நம்புகிறேன்.

செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

கடற்றொழிலாளர் சமூகத்தின் நலன்களுக்காக தமிழக அரசியல்வாதிகளின் விமர்சனங்களையும் அதிருப்தியையும் எதிர்கொண்டவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறும் செயற்பாடுகளால் எமது கடற்றொழிலாளர்கள் பாரிய தொழில் இழப்புக்களைச் சந்தித்து வருகின்றனர். எமது கடற்றொழிலாளர் சமூகத்தின் நலன்களுக்காக தமிழக அரசியல்வாதிகளின் விமர்சனங்களையும் அதிருப்தியையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எதிர்கொண்டு வருகின்றார் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமராட்சி கரையோரப் பிரதேச இணைப்பாளர் அந்தோனிப்பிள்ளை பிரான்சிஸ் ரெட்ணகுமார் தெரிவித்தார். 

நேற்று (10) வடமராட்சி கிழக்கு, வெற்றிலைக்கேணி கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்கத் தலைவர் சீவரெத்தினம் லிங்கேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற மக்களுடனான கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், விடுதலைப் போராட்டங்கள் ஆரம்பித்த காலம் தொடக்கம் எமது கடற்றொழிலாளர்கள் பாரிய பங்களிப்பைச் செய்து வந்தனர். தற்போது இடம்பெயர்வுகளை எதிர்கொண்ட காலத்திலிருந்து தமது தொழில் வளங்களை இழந்தனர். அத்துடன் எமது கடல் வளங்களை இந்திய ரோலர்கள் வாரிச் சுருட்டிச் செல்கின்றனர். 

ஆயினும் இங்கு பல கட்சிகள் தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பதாக தம்பட்டம் அடித்துக் கொள்கின்றன. ஆனால் உண்மையில் டக்ளஸ் தேவானந்தா ஒருவர் மட்டுமே எமது கடற்தொழிலாளர் மக்களின் நலனுக்காக உழைத்து வருகின்றார். இந்திய ரோலர்களின் அத்துமீறல் தொடர்பாக கச்சதீவு அந்தோனியார் திருவிழாவின் போது கூட அங்கு வந்த தமிழக மீனவப் பிரதிநிதிகளுடன் எமது பிரதிநிதிகளைப் பேச வைத்து எமது தொழிலாளர்களின் நிலைகளையும் அவர்களின் வாழ்வாதாரப் பாதிப்புக்களையும் எடுத்துக் கூறுவதற்கான வாய்ப்புக்களையும் ஏற்படுத்தியிருந்தார். எல்லை மீறி நுழைந்த இந்திய ரோலர்களை வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்கள் சிறைப்பிடித்த போது எமது கடற்றொழிலாள மக்களின் நலனுக்காக நியாயப்பாடுகளை எடுத்துரைத்திருந்தார். அதனால் தமிழக அரசியல்வாதிகளின் விமர்சனங்களையும் அதிருப்தியையும் எதிர்கொண்டார். 

எமது சமூகத்தின் வளர்ச்சிக்காக அவர்களின் வாழ்வாதார உயர்ச்சிக்காகவும் பணியாற்றுவதற்காக என்னிடம் கரையோரத்திற்கான பொறுப்புக்களை வழங்கியுள்ளார். முன்னர் நான் பருத்தித்துறை முனை கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக இருந்துள்ளேன். எனவே கடற்றொழிலாளர்களின் குறைகளை அறிவேன். தற்போது மண்ணெண்னை மானியம் தொடர்பான விடயங்களை ஆராய்ந்து வருகின்றோம். அது தொடர்பான விபரங்களை சங்கத்திடம் கோரியுள்ளோம். அதனையும் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளேன் எனத் தெரிவித்தார். 

இக்கலந்துரையாடலில் ஈழமக்கள் ஜனநாயக்கட்சியின் வடமராட்சி இணைப்பாளரும், பருத்தித்துறை பிரதேசசபையின் எதிர்க்கட்சித் தலைவருமான ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

புதன், 5 பிப்ரவரி, 2014

இவர் என்ன சொல்கின்றார் ?

இன்று பல இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் வெளிவந்த செய்தி " வடமராட்சி கிழக்குக்கான மின் வழங்கலில் அசமந்த போக்குடன் அதிகாரிகள் " ஆனால் இதிலும் குறிப்பாக இவர் கூறி இருப்பது " வடக்கின் வசந்த திட்டத்தின் கீழ் வெற்றிலைக்கேணி கிராமத்தில் இருந்து விண்ணப்பித்தவர்களுக்கு மத்திய அரசாங்க ஆதரவுள்ள அரசியல் கட்சி அரசியல் வாதிகளின் தலையீட்டால் அவர்களுக்கு கடந்த தேர்தலில் இம் மக்கள் வாக்களிக்கவில்லை என்பதற்காகவும் மின் இணைப்பு வழங்கவில்லை " என்கின்றார் . ஆனால் முதற் கட்டமாக ஒரு பகுதியினருக்கு வெற்றிலைக்கேணி பகுதிக்கு மின்சாரம் வழங்கப்பட்டது . விண்ணப்பம் செய்தவர்களின் விண்ணப்பங்கள் மின்சார சபையினரின் பூர்வாங்க செயற்பாடுகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வடமராட்சி மின் அத்தியட்சகர் அறிவித்துள்ளார். இவர்களுக்கான இணைப்பு காலக்கிரமத்தில் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.அதைவிட்டுவிட்டு யதார்த்தம் தெரியாமல் ஊடக நேர் காணல் வழங்கக்கூடாது.

சனி, 1 பிப்ரவரி, 2014

மாற்றம் ஒன்று நிகழும் என்பதில் மாற்றமே இருக்காது - பருத்தித்துறை பிரதேசசபை எதிர்க்கட்சித் தலைவர்...!


மாகாணசபை நிர்வாகத்தால் கல்வித்துறையில் எவ்வித முன்னேற்றகரமான திட்டங்களும் இணைத்துக் கொள்ளப்படவில்லை. எனவே மாற்றம் ஒன்று நிகழும் என்பதில் மாற்றமே இருக்காது என திடமாக நம்புவதாக பருத்தித்துறை பிரதேசசபை எதிர்க்கட்சித் தலைவரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமராட்சி அமைப்பாளருமான ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்தார். 

அணமையில் வடமராட்சி கிழக்கு, வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வன்மை திறனாய்வு நிகழ்வு வித்தியாலய அதிபர் திரு த.செல்வகுமார் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில்  சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இப்பாடசாலை இடப்பெயர்வுக்குப் பின்னர் அல்லாரை நலன்புரி நிலையத்தில் இயங்கி வந்த காலம் தொடக்கம் நாம் இப்பாடசாலையின் வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளை ஆற்றி வந்துள்ளோம். கடந்த வருட பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியிலிருந்து மேலத்தேய பாண்ட் வாத்தியக் கருவித் தொகுதிகள் கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஒதுக்கீட்டிலிருந்து பெற்றுத் தரப்பட்டுள்ளது. தற்போது மாகாணசபையில் அரியாசனங்களை அலங்கரித்துக் கொண்டுள்ள கடந்த நான்கு மாதங்களில் எதனைச் சாதித்தார்கள் என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகின்றோம். மாகாணசபை நிர்வாகத்தால் கல்வித்துறையில் எவ்வித முன்னேற்றகரமான திட்டங்களும் இணைத்துக் கொள்ளப்படவில்லை என்பதுடன் ஆசிரியர்கள் பற்றாக்குறையை நிவிர்த்தி செய்யப்படவில்லை. எனவே  மாற்றம் ஒன்று நிகழும் என்பதில் மாற்றமே இருக்காது என திடமாக நம்புவதாகவும் மாணவர்களின் கல்வி வளர்ச்சி, அறிவுத்திறன் வளர்ச்சிக்காக நாம் தொடர்ந்தும் அக்கறையுடன் செயற்படுவோம் எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமராட்சி வலய பிரதிக் கல்விப் (நிர்வாகம்) பணிப்பாளர் திரு யோ.ரவீந்திரன் அவர்கள் கலந்து கொண்டு வெற்றிக் கேடயத்தை வழங்கினார். இல்ல மெய்வன்மை திறனாய்வு நிகழ்வில் எல்லாளன் இல்லம் முதலாம் இடத்தையும் பண்டாரவன்னியன் இல்லம் இரண்டாம் இடத்தையும் சங்கிலியன் இல்லம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது.